கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் மத்திய அமைச்சரவையில் உள்ள அவரது சகாக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் 2019 மற்றும் 2020 க்கு இடையில் கணிசமாக அதிகரித்துள்ளதாக கனேடிய ஆா்.சி.எம்.பி. பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் ட்ரூடோ மற்றும் அவரது அமைச்சர்களை குறிவைத்து இடம்பெற்ற அச்சுறுத்தல் தொடா்பில் 130 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டு இதே நேரத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் 100 ஆக பதிவாகி இருந்தன. 2019 முழுவதும் இதுபோன்ற 215 அச்சுறுத்தல்கள் பதிவாகியுள்ளன எனவும் ஆா்.சி.எம்.பி. பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அச்சுறுத்தல்களின் தன்மையைப் பகிர்ந்து கொள்ள முடியாது என ஆர்.சி.எம்.பி. அறிவித்துள்ளது. ஆனால் அச்சுறுத்தல்கள் பெரும்பாலும் லிபரல் கட்சியின் உயா்மட்ட அரசியல்வாதிகளைக் குறிவைக்கும் வகையில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை உள்கட்டமைப்பு அமைச்சர் கத்தரின் மெக்கென்னாவின் தொகுதி அலுவலகத்தில் கடமையில் இருந்த பெண் ஊழியரிடம் ஒருவா் ஆபாசமாகக் கத்துவதைக் காட்டும் வீடியோ வெளிவந்தது. இதனையடுத்து ஒட்டாவா பொலிஸார் இது குறித்த விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்..
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட 90 விநாடிகளைக் கொண்ட வீடியோவில் ஆளும் லிபரல் கட்சி எம்.பி. அலுவலகத்தின் வாசலை நெருங்கிய ஒருவர் அழைப்பு மணியை ஒலித்தார். ஒரு பெண் ஊழியர் கதவைத் திறந்து வந்து அலுவலகம் மூடப்பட்டிருப்பதாக அவருக்குத் தெரிவித்தார். இதனையடுத்து அந்த நபா் ஆபச வாத்தைகளைப் பயன்படுத்தி திட்டியமை அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. என்னையும் எனது ஊழியர்கள், குடும்பத்தினரை மையப்படுத்தி இவ்வாறாக சம்பவம் இடம்பெற்றதாகக் கருத முடியாது. அரசியல்வாதிகள், பெரும்பாலும் பெண் அரசியல்வாதிகளுக்கு எதிரான சம்பவங்களில் ஒன்றாகத்தான் இதனைக் கருத முடியும் என அமைச்சர் கத்தரின் மெக்கென்னா தெரிவித்துள்ளார்.
கடந்த முறை தோ்தலில் வென்று பதவியேற்றதைத் தொடா்ந்து மெக்கென்னாவின் பிரச்சார அலுவலகத்தில் அவதூறு செய்யும் வகையில் அவரது படம் வரையப்பட்டிருந்தது.
இதனைவிட பிரதமரின் குடும்பம் தற்போது வசித்து வரும் ரைடோ ஹாலின் வாயிலில் கடந்த ஜூலை மாதம் தனது வாகனத்தால் மோதிய குற்றச்சாட்டிஎல் கோரி ஹர்ரன் என்பவார் கைது செய்யப்பட்டார். ஒரு அரை தானியங்கி துப்பாக்கி, இரண்டு ஷொட்கன்கள், ஒரு ரிவால்வர் மற்றும் நான்கு கத்திகளை அவர் தனது உடமையில் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதமருக்கு அச்சுறுத்தல் விடுத்தது உட்பட 22 குற்றச்சாட்டுகளை ஹர்ரன் எதிர்கொள்கிறார். இது குறித்த விசாரணைகளை ஆர்.சி.எம்.பி.யின் தேசிய பாதுகாப்பு குழு முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.